Cinema Virumbi

July 31st, 2008

கால் சென்டர் கலாசாரம்

Posted by Cinema Virumbi in Katturai

கடந்த  மூன்றாண்டுகளில்  அவ்வப்போது  சர்ச்சைக்குரிய  கருத்துக்களை  வெளியிட்ட  போதிலும் , இந்த  BPO எனப்படும்  கால் சென்டர் விஷயத்தில்  மத்திய  சுகாதார  அமைச்சர்  சொல்லியிருப்பது  நூற்றுக்கு   நூறு  உண்மை! சொல்லப் போனால்  அவர்   சொன்னது  கொஞ்சம், எவரையும்  புண்படுத்த  வேண்டாமென்று  சொல்லாமல்  விட்டது  மிக  அதிகம்!

கால் சென்டர்களை    ஆதரிப்பவர்களின்  தரப்பு  வாதம்  என்னவென்றால்
“ எந்த  ஒரு நன்மையும்  சமூகத்தில்  காலடி  எடுத்து  வைக்கும்  போது  கூடவே  நாலு  தீமையும்  நுழையத்தான்   செய்யும் ! நாம்தான்  ஜாக்கிரதையாக  இருக்க  வேண்டுமே தவிர  ஒரேயடியாக  அந்த  நன்மைக்கே  முட்டுக்கட்டை  போடுவது  கடைந்தெடுத்த  பத்தாம்  பசலித்  தனம் !” ‘பழையன  கழிதலும்  புதியன  புகுதலும் ’ வரவேற்க  வேண்டியவையே  என்று  நம் பெரியவர்களே  சொல்லவில்லையா ?’  “Work hard, Party hard! (கடினமாக  உழை ! மிகக்  கடினமாக பார்ட்டி  கொண்டாடு !) என்ற  கொள்கை உடையவர்கள்  இந்தத்  துடிப்பு  மிகு  இளைஞர்கள் ! இதில்  என்ன தவறு? இரண்டு மூன்று  தலைமுறை பழசாய்ப்  போனவர்களெல்லாம்  பொறாமையில்  மூக்கைச் சிந்தி  ஒப்பாரி  வைக்கலாமா ?”

மேலெழுந்தவாரியாக  நியாயம்   போல் தோன்றும்  இந்த வாதங்களில்  பூசி  மெழுகப்படும்  விஷ(ய)ங்களை  நாம் கூர்ந்து  நோக்க  வேண்டும் ! வேலைக்குச்   சேர்ந்த  முதல்  மாதத்திலேயே , தன் தந்தையின்  மாத  சம்பளத்தை  விட அதிகம் வாங்கும்  ஒரு பையனோ  பெண்ணோ , சற்று  மிதப்புடன்  இருப்பது  புரிந்து  கொள்ளக்  கூடியதுதான் ! ஓரிரு வருடங்களில் சரியாய்ப்  போய்  விடக்கூடிய  ஒரு சில்லறைக்  குற்றம்தான் ! ஆனால் ,  வார  இறுதியில்  கொண்டாடப்  படும் week end    பார்ட்டிகள்தான்  இந்த BPO க்களின்  மாபெரும்  சாபக்கேடு ! சிகரெட் , மது (பொதுவாக  பீர் , பல சமயங்களில் விஸ்கி , ரம்  எனக் கொள்க !) என்றால்  இயல்பாகவே  நம் பெண்களுக்குள்ள  அருவருப்பு , வெறுப்பு , அச்சம், கூச்சம் , தயக்கம்  அத்தனையையும்  குண்டுக்கட்டாகத்  தூக்கி  வங்காள  விரிகுடாவில்  வீசிய  புண்ணியத்தை  இந்தக்  கால் சென்டர்கள்   தேடிக் கொண்டுள்ளன ! இந்திய (குறிப்பாகத்  தமிழ் ) சமூகத்தில்  கடந்த  பல  நூறு  ஆண்டுகளாக  நெறிகளில்  மெல்ல  மெல்ல  ஏற்பட்ட   சீரழிவை  , நான்கைந்து  வருடங்களிலேயே  அசுரத்தனமாக  மிஞ்சிக் காட்டிய  பெருமையும்  இவற்றையே  சாரும் ! புகை , பீர்  மற்றும்  ரம் , விஸ்கி போன்றவை  தண்ணீர்   போலப்  புழங்கும்  ஒரு சூழலில் , ஆண்கள்  பெரும்பாலானோர்  தன் வயம்  இழந்த  சூழ்நிலையில் , திருமணம்  ஆகாத  பெண்கள்  வளைய  வருவது  மேல்தட்டு  வர்க்கத்துக்கு  வேண்டுமானால்  சரிப்பட்டு  வரலாம்  ! என்னதான்  கை  நிறைய  சம்பாதித்தாலும்   இந்தப்  பெண்ணுக்கு  நல்ல  மண வாழ்க்கை  அமைய   வேண்டுமே  என்ற  அக்கறையுள்ள  மத்யமர்களுக்கு  எந்நாளும்   ஒத்து  வராது  !

மறைந்த எழுத்தாளர்  சுஜாதா  ஒருமுறை  எழுதியது  போல்  ‘நம்  ஆட்களுக்கு  அளவாகக்  குடிக்கவும்  தெரியாது !’ இன்றுதான்  உலகின்  கடைசி  நாள்  என்பது  போல்  அரக்கத்  தனமாகக்  கொண்டாடப்  படும்  இந்த  வார  இறுதிப்  பார்ட்டிகளில்  பெண்கள்  பலரும்  குடித்து  விட்டு  ‘அவுட் ’  ஆகி  விழுவதும் , ‘கால்  சென்டரில்  இதெல்லாம்  சகஜமப்பா !’ என்று  சில  தடியன்கள்  அவர்களை  ‘க்வாலிஸ்  ’ வண்டியில்  தூக்கி  வந்து  வீட்டில்  பெற்றோரிடம்  நடு நிசியில்  தள்ளி விட்டுப் போவதும்  எத்தனையோ வீடுகளில்  நடக்கின்றன ! காலையில்  அதே  பெண்  எழுந்து , தேள்  கொட்டிய  திருடனாய்    இருக்கும்  பெற்றோர்  மற்றும்  சகோதர  சகோதரிகளிடம்  தன்  உரிமைகளைப்  பற்றி   ஆவேசமாய்  சர்ச்சை  செய்வதையும்  கண்கூடாகப்  பார்க்க  முடிகிறதே ! பெண்களின்  ஒழுக்க  உணர்வு  தளர்ந்தால் சமூகம்  குட்டிச்  சுவராக  சில  பத்தாண்டுகளே  போதுமே ! பொருளாதார  மேதைகள்  நமக்குக்  காட்டும்  ரசவாதமான  10%   GDP வளர்ச்சிக்கு  நாம்  கொடுத்துத்  தொலைக்க  வேண்டிய  விலை  இது  என்று  புறந்தள்ளி  விட்டுப்  போக  முடியுமா  பண்பாட்டின்  இந்த  அதல  பாதாளச் சீர்கேட்டை ? நாளை  சமூகத்தை  மீட்டெடுக்க  எத்தனை மகான்கள்  முயன்றாலும்  முடியுமா ? துரதிர்ஷ்டவசமாக , இது  போன்ற  சமுதாயச்  சிக்கல்களுக்கெல்லாம்  ‘RESET’  பட்டன்  இன்னமும்  கண்டு  பிடிக்கப்  படவில்லையே !!!

(வடக்கு வாசல் நவம்பர் 2007 இதழில் சில சிறிய மாற்றங்களோடு வெளி வந்தது)

Leave a reply

:mrgreen: :neutral: :twisted: :shock: :smile: :???: :cool: :evil: :grin: :oops: :razz: :roll: :wink: :cry: :eek: :lol: :mad: :sad: